ஷா ஆலம் :

மஇகா தேசிய முன்னணி கூட்டணியிலிருந்து வெளியேறி பெரிக்காத்தான் நேஷ்னலில் இணைவதற்கான தீர்மானம் இன்று அக்கட்சியின் 79-ஆவது பொதுப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

மேலும், இந்த விவகாரம் விரைவில் மத்தியச் செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. அதன் பின்னர் ஏற்படும் இறுதி முடிவை மஇகா தலைவர் தான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று பேரவையில் தெரிவிக்கப்பட்டது.

மஇகா தலைவர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன் மற்றும் மத்திய செயற்குழுவினருக்குப் புதிய அரசியல் தளத்தை உருவாக்கும் நோக்கில், அரசாங்க செயலாக்க அதிகாரிகளுக்கு வழங்கும் அதிகாரப்பூர்வ ஆவணங்கள் மற்றும் பொதுமக்களுக்கு அறிவிப்புகள் உட்பட அனைத்து நடவடிக்கைகளையும் அதிகாரப்பூர்வ விவகாரங்களையும் சரியான நேரத்தில் மேற்கொள்ள பேராளர்கள் முழு அதிகாரத்தை வழங்குவதாக இன்றையப் பொதுப் பேரவையில் தெரிவித்தனர்.

நாட்டில் இந்தியச் சமுதாயத் தேவைக்கு ஏற்ப, கொள்கை ரீதியாகவும் தகுதியானதாகவும் மற்றும் உறுதியான அங்கீகாரத்தை வழங்கும் ஒரு புதிய அரசியல் தளத்தை உருவாக்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் முன்னெடுக்கப்பட்டதாக பேராளர்கள் தெரிவித்தனர்.

மேலும், பெரிக்காத்தான் நேஷ்னல் கூட்டணியில் இணைவதற்கு முறையாக விண்ணப்பிப்பதற்கு பேராளர்கள் ஆதரவு தெரிவித்தனர்.