கோலாலம்பூர், பிப் 23 –
நாடு முழுவதும் உள்ள பொது, தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் பட்டதாரிகள், வேலை தேடுபவர்களின் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்தும் திட்டங்களைச் செயல்படுத்த 5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டை மனிதவள அமைச்சு இன்று அறிவித்தது.
இந்த முன்முயற்சிகள் வரும் ஏப்ரல் மாதம் முதல் சமூகப் பாதுகாப்பு நிறுவனம் (Perkeso) வழியாக நாடு முழுவதும் உள்ள 400 உயர்கல்வி நிறுவனங்களில் செயல்படுத்தப்படும் என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
இங்குள்ள நு சென்ட்ரலில் (Nu Sentral) முதலாவது ‘MyFutureJobs’ தொழில் ஆய்வு மையத்தை (MYCEC) தொடங்கி வைத்துப் பேசிய அவர், “பல்கலைக்கழக மாணவர்களிடையே டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கு MyFutureJobs ஒரு முக்கிய ஊன்றாகச் செயல்படும். இது தற்போதைய தொழில்துறை தேவைகளுக்கு ஏற்ப மாணவர்களின் திறன்களை வலுப்படுத்தும்,” என்றார்.
மாணவர்களின் எதிர்காலத் தொழில் பாதையை தொலைநோக்கு ரீதியாகத் திட்டமிடவும் வழிகாட்டவும் உயர்கல்வி அமைச்சகத்துடன் மனிதவள அமைச்சு நெருக்கமாகப் பணியாற்றும் என்றும் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

