கோலாலம்பூர், பிப். 23 –
Malaysian Indian People Party (மலேசிய இந்தியர் மக்கள் கட்சி – MIPP), பெரிக்காத்தான் நேஷனல் (PN) கூட்டணியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அஹ்மத் சம்சுரி முக்தாருக்கு தனது இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது.
கட்சியின் தலைவர் எஸ்.பி. புனிதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டின் அரசியல் சூழ்நிலைக்கு முக்கியமான தருணத்தில் இந்த நியமனம் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு கூட்டணியின் திசை, ஒற்றுமை மற்றும் நம்பகத்தன்மையை வலுப்படுத்துவதில் சம்சுரி முக்தார் அவர்களின் தலைமையால் முக்கிய பங்கு வகிக்கப்படும் என புனிதன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும், அவரது தலைமையின் கீழ் பெரிகாத்தான் நேஷனல் மலாய் அல்லாத சமூகங்களிடையே நம்பிக்கையை மீட்டெடுத்து, மேலும் உள்ளடக்கமான மற்றும் அனைத்து இனங்களையும் வரவேற்கும் கூட்டணியாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது என மலேசிய இந்தியர் மக்கள் கட்சி தெரிவித்துள்ளது.
அனைத்து இனங்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அனைத்து மலேசியர்களாலும் நம்பப்படும் பரந்த தேசியக் கண்ணோட்டத்துடன் அவர் செயல்படுவார் எனவும், பல இன மற்றும் பல மதங்களை உள்ளடக்கிய சமூகத்தில் அமைதி, செழிப்பு மற்றும் நல்லிணக்கத்தை பாதுகாக்கும் முயற்சிகள் தொடரும் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

