ஜொகூர் பாரு:
யோகா பயிலும் மாணவர்கள் குழுவாக இணைந்து 108 சூரிய நமஸ்காரம் செய்யும் சாதனை முயற்சி எதிர்வரும் மார்ச் 28ஆம் தேதி நடைபெறவுள்ளது.
70-க்கும் அதிகமான மாணவர்கள் குழுவாக இணைந்து 30 நிமிடங்களுக்குக் குறைவான நேரத்தில் 108 சூரிய நமஸ்காரம் செய்யும் இந்த முயற்சி “முதல் சூரிய நமஸ்காரம் சாதனை முயற்சி” என மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பிடிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஜொகூர் பதஞ்சலி அஷ்டாங்க யோகா பயிற்சி மையத்தின் இயக்குநரும் மூத்த அஷ்டாங்க யோகா மாஸ்டருமான மாஸ்டர் தாமரைசெல்வி சுகுமாரன் தெரிவித்தார்.

பதஞ்சலி AYTC ஜொகூர் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த நிகழ்ச்சி ஜொகூர் பாருவிலுள்ள புத்ரி வாங்சா மண்டபத்தில் காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ள நிலையில் டேசா செமர்லாங் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியை திருமதி.செல்லம்மா, ஜொகூர் மாநில கல்வித் துறையின் பாலர் பள்ளி துணை இயக்குநர் திரு.ரவிசந்திரன் உட்பட இன்னும் பலர் சிறப்பு பிரமுகர்களாகக் கலந்து கொள்ளவுள்ளனர்.
மாணவர்கள் குழுவாக இணைந்து மிக வேகமாக 108 சூரிய நமஸ்காரம் செய்யும் இந்த முயற்சி ‘முதல் சூரிய நமஸ்காரம் சாதனை முயற்சி’ என்ற வகையில் மலேசிய சாதனைப் புத்தகத்தில் பதிவு செய்யும் இலக்குடன் நடத்தப்படுகிறது.
இந்நிகழ்ச்சியின் மூலம் மாணவர்களிடையே யோகா பயிற்சியின் முக்கியத்துவம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதே முக்கிய நோக்கமாகும என்றும் மாஸ்டர் தாமரைசெல்வி குறிப்பிட்டார்.
மேலும், நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் காலை உணவு மற்றும் மதிய உணவு வழங்கப்படும் என்றும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

