கோலாலம்பூர்:
கோலாலம்பூர், மஸ்ஜிட் இந்தியா பகுதியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நில அமிழ்வு சம்பவத்தில் உயிரிழந்த இந்தியாவைச் சேர்ந்த ஜி. விஜயலட்சுமியின் குடும்பத்தினர், மலேசிய அரசாங்கம் தகுந்த இழப்பீடாக சுமார் ரிம 824,000 வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த மாதம் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சாலையோரத்தில் மரம் விழுந்து உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு ரிம 824,180 இழப்பீடு வழங்க கோலாலம்பூர் மாநகர் மன்றம் (DBKL) நிர்வாகத்துக்கு உத்தரவிட்டதை அடிப்படையாகக் கொண்டு இந்த தொகை பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜயலட்சுமி குடும்பத்தின் வழக்கறிஞரான எம். பார்த்திபன் கூறுகையில், இழப்பீட்டு தொகை தொடர்பாக DBKL மற்றும் கூட்டரசு பிரதேச அமைச்சர் ஹன்னா யோவுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவித்தார்.
இந்த நில அமிழ்வு சம்பவத்தில் அலட்சியம் ஏற்பட்டிருப்பதை ஆரம்பகட்ட விசாரணை அறிக்கைகள் சுட்டிக்காட்டுவதாகவும் அவர் கூறினார். நிலத்தடிப் பயன்பாட்டு வசதிகள், புவியியல் பிரச்சினைகள் மற்றும் சேதமடைந்த கழிவுநீர் குழாய்கள் போன்ற அம்சங்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
“2023ஆம் ஆண்டு நடந்த மரம் விழுந்து உயிரிழப்பு சம்பவத்தில் பராமரிப்பு அலட்சியம் இருந்ததாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதுபோலவே இந்த நிலச்சரிவு சம்பவத்திலும் அலட்சியத்தை நிரூபிக்க முடியும்,” என அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
அச்சந்திப்பில் விஜயலட்சுமியின் மகன் எம். சூர்யாவும் கலந்துகொண்டார்.
2024 ஆகஸ்ட் 23ஆம் தேதி, ஜாலான் மச்ஜித் இந்தியா நடைபாதையில் திடீரென உருவான சுமார் 8 மீட்டர் ஆழமுள்ள நிலச்சரிவில் விழுந்து விஜயலட்சுமி மாயமானதாக அறிவிக்கப்பட்டது.
பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இரசாயன விளைவால் சேதமடைந்த கழிவுநீர் குழாய் மற்றும் நிலத்தின் நிலைத்தன்மை பாதிப்பு காரணமாக அந்த நிலச்சரிவு ஏற்பட்டது என கண்டறியப்பட்டது.
நேற்று, விஜயலட்சுமியின் குடும்பத்தினர் தேசிய பதிவுத்துறையிடமிருந்து அதிகாரப்பூர்வ மரணச் சான்றிதழை பெற்றுக்கொண்டனர்.
இந்நிலையில் குடும்பத்தின் மற்றொரு வழக்கறிஞரான முஹமட் சைஃபுல்லா முஹமட் அஸ்மி கூறுகையில், இழப்பீட்டு தொகை நிர்ணயிக்கும்போது சிறப்பு நஷ்டஈடு, பொதுநஷ்டஈடு மற்றும் குடும்பத்தின் பொருளாதார நிலை போன்ற அம்சங்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்றார்.
மேலும், மரணச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை பெற இந்தியாவிலிருந்து மலேசியாவுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக பலமுறை பயணம் செய்ததால் குடும்பத்தினர் அதிக செலவுகளை சந்தித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“இந்த சம்பவத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு வழங்கப்படும் இழப்பீடு மிகவும் குறைவாக இருக்கக்கூடாது. ஏற்பட்ட இழப்பிற்கு ஏற்றவாறு நியாயமானதாக இருக்க வேண்டும்,” என அவர் தெரிவித்தார்.