கோலாலம்பூர், நவ.29-
மலேசியாவில் உயரமான மேம்பாலம் என வர்ணிக்கப்படும் ரவாங் மேம்பாலம் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது. செராண்டாவிலிருந்து செலாயாங்கிற்கு செல்லும் சாலையில் பொதுமக்கள் வாகன நெரிசலில் சிக்கி வந்த நிலையில் இந்த புதிய மேம்பாலம் அதற்கு தீர்வாக அமைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த நெடுஞ்சாலை காலை மணி 6.00க்கு திறக்கப்பட்டது. இந்த மேம்பாலத்தின் வாயிலாக நாள்தோறும் 30,000 வாகனமோட்டிகள் நன்மை அடைவார்கள் என நம்பப்படுகின்றது. செராண்டாவிலிருந்து செலாயாங்கிற்கு செல்லும் சாலையில் வாகன நெரிசல்களில் மாட்டிக் கொண்டு தவிக்கும் வாகனமோட்டிகளின் பிரச்சனைகளை களையும் வகையில், இந்த 9 கிலோமீட்டர் தூரம் கொண்ட மேம்பாலம் அமைக்கப்பட்டதாக பொதுப்பணித் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஃபாடிலா யூசோப் தெரிவித்தார்.
628 மில்லியன் ரிங்கிட் செலவிலான இந்த மேம்பாலத்தின் கட்டுமான பணிகள் கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16-ஆம் தேதி தொடங்கப்பட்டு, இவ்வருடம் நவம்பர் மாதம் 21-ஆம் தேதி நிறைவு பெற்றது. தரையிலிருந்து 58.2 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டிருக்கும் இந்த மேம்பாலம் மலேசியாவிலேயே உயரமான மேம்பாலமாக திகழவுள்ளது. இந்த புதிய மேம்பாலத்தின் வாயிலாக வாகன நெரிசலில் 50 விழுக்காடு குறையும் என அவர் கூறினார்.