கோலாலம்பூர், பிப். 18

பொன்மனச் செல்வி டத்தோ ஆதியின் ஏடி மூவிஸ் நிறுவன தயாரிப்பிலான ‘அழகிய தீ ‘ திரைப்படத்தின்  பாடல்கள் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியீடு கண்டன.

இத்திரைப்படத்தில் இடம் பெற்ற உருகுது  ஒரு மனம் மற்றும் யாரோ இவள் யாரோ ஆகிய இரு பாடல்களும் தலைநகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர்கள் மற்றும் படக் குழுவினர் முன்னிலையில் அறிமுகம் கண்டன.

  பிரபல இசையமைப்பாளர் ஜெய் இசையில் அருள் பாடல் வரிகளை அமைத்துள்ளார்.

குமரேஷ் மற்றும் குகா ஸ்ரீ  குரலில் ஒலித்திருக்கும் இவ்வினிய பாடல்களை மக்கள் மின்னல் எஃப்எம், டிஎச்ஆர் ராகா, யூ டியூப் போன்றவற்றில் கேட்டு ரசிக்கலாம் என்று  டத்தோ ஆதி தெரிவித்தார். கதாநாயகனாக சரேஸ், கதாநாயகியாக லதா நடித்திருக்கும் ‘அழகிய தீ ‘ திரைப்படம் விரைவில் உள்ளூர் திரையரங்குகளில் திரையிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் அதற்கேற்ப இப்படத்தில் புதுமுகங்கள் இடம் பெற்றிருப்பதாகவும் ஆதி விவரித்தார்.

 

இதனிடையே, ஏடி மூவிஸ் நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பான ‘அதையும் தாண்டி’ திரைப்படம் குறித்தும் இந்நிகழ்ச்சியில் அறிவிப்பு செய்யப்பட்டது.

 

சுமார் 5 லட்சம் வெள்ளி செலவில் தயாரிக்கப்படவிருக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் 1 ஆம் தேதி தொடங்கவிருப்பதாகவும் அவர் சொன்னார்.