கோலாலம்பூர்,
மலேசிய இந்திய காங்கிரஸ் (மஇகா) கட்சி, பாரிசான் நேஷனல் (தேசிய முன்னணி) உயர்மட்ட தலைவர்களுடன் பேச்சுவார்த்தைக்கு எப்போதும் தயாராக உள்ளதாக அதன் தலைவர் தான்ஶ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
“இப்போது வரை தேசிய முன்னணியிலிருந்து எங்களை சந்திக்க எந்த அழைப்பும் வரவில்லை. ஆனால் எப்போது வேண்டுமானாலும் சந்திப்பை முன்னெடுக்க நாங்கள் தயாராக உள்ளோம்.
60 ஆண்டுகால உறவு
தேசிய முன்னணி, அம்னோ-மஇகா இங்கு எதிரிகள் அல்ல. 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றாக இருக்கும் கூட்டணி இது,” என்று தான்ஶ்ரீ விக்னேஸ்வரன் ‘சினார் ஹரியன்’க்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.
அண்மைய பதற்றநிலைகளிலும், தேசிய முன்னணி தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் அஹ்மத் ஸாஹித் ஹமிடி, அம்னோவை மஇகா ஒருபோதும் எதிரியாகப் பார்த்ததில்லை. மஇகா எடுத்துவரும் முடிவுகள், கட்சி அரசியல் வெளியில் தக்க இடம் பெறவில்லை என்ற கவலையின் அடிப்படையில்தான் என அவர் குறிப்பிட்டார்.
அரசியல் நாகரீகம் உண்டு
“நாங்கள் எடுக்கும் எந்த முடிவும் யாரையும் அச்சுறுத்துவதற்கோ அல்லது பாதிப்பதற்கோ அல்ல. மஇகா அப்படிப்பட்ட அரசியல் நடைமுறையைக் கொண்ட கட்சி அல்ல,” என்றும் தான்ஶ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.

