கோலாலம்பூர், ஆக.17-
இம்மாதம் 7ஆம் தேதி ஷா ஆலம், மாரா பல்கலைக்கழகத்திற்கு அருகே, எல்ஆர்டி ரயில் நிலையத்திற்கு முன்பு கூட்டரசு நெடுஞ்சாலையின் 9.9 கிலோ மீட்டரில் இரவு 9.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் கோலாலம்பூரை நோக்கிச் சென்ற புகழ்பெற்ற நடிகர் பர்வின் நாயர் சுரேந்திரன் விபத்து ஒன்றில் சிக்கி, மரணமடைந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்த விபத்து சம்பந்தமாக எந்தவொரு விவரமும் தெரியாத நிலையில், அச்சமயத்தில் அச்சாலையில் சென்றோர், தங்களுக்குத் தெரிந்த விவரங்களை போலீஸுக்குத் தெரிவிக்க முன்வர வேண்டுமென மரணமடைந்த பர்வினின் தங்கை எஸ். யசோதா கேட்டுக் கொண்டுள்ளார்.
குடும்பத்திற்கு உற்ற துணையாக இருந்த அவர் விபத்தில் மரணமடைந்த விவகாரம் குடும்பத்தில் சொல்லொணா சோகத்தை ஏற்படுத்தி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
-பொன் முனியாண்டி

