ஜொகூர் தமிழ்ப் பள்ளிகளில் திருவள்ளுவர் சிலைகளை அகற்ற பரிந்துரை : தமிழர் சங்கம் கண்டனம்

 

ஜொகூர், நவ. 30-

ஜொகூர் மாநில கல்வித்துறை இம்மாநிலத்திலுள்ள பல தமிழ்ப் பள்ளி வளாகங்களில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைகளை அகற்றும்படி முன்மொழிந்திருப்பது, தமிழ்ச் சமூகத்தில் பெரும் அதிருப்தியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு மலேசியத் தமிழர் சங்கம் கடும் எதிர்ப்பை பதிவு செய்வதாக அதன்  தேசியத் தலைவர் பரமசிவம் மருதை தெரிவித்தார்.

“திருவள்ளுவர் உலகளவில் ஞானத்தின் சின்னமாகவும் மனிதநேய மதிப்புகளின் முன்னுதாரணமாகவும் மதிக்கப்படுபவர். அவரின் *திருக்குறள்* எந்த மதத்துடனும் சார்பில்லாத பொதுமறை. அறிவையும் ஒழுக்கத்தையும் போதிக்கும் திருவள்ளுவர் உருவத்தை மதச் சின்னமாக கருதுவது தவறான புரிதலின் விளைவு,” என்று அவர் குறிப்பிட்டார்.

“தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் உருவம் மாணவர்களுக்கு ஒழுக்கம், நேர்மை, மனிதநேயம் போன்ற அடிப்படை மதிப்புகளை வளர்க்கும் வழிகாட்டியாக உள்ளது. கல்வி வளாகங்களில் இருந்து இப்படியான சின்னங்களை அகற்றுவது தேவையற்ற சர்ச்சையையும் சமூக ஒற்றுமைக்கு விரோதமான சூழலையும் உருவாக்கும்” என்றார்.

இந்த முன்மொழிவை உடனடியாக வாபஸ் பெறுமாறு ஜொகூர் மாநில கல்வித் துறையை மலேசியத் தமிழர் சங்கம் வலியுறுத்துகிறது. மேலும், தமிழ் கல்வி அமைப்புகள், சமூகத் தலைவர்கள், பெற்றோர் மற்றும் அறிஞர்களுடன் ஆலோசனை நடத்தாமல் எடுக்கப்படும் எந்த முடிவும் ஏற்க முடியாதது என சங்கம் சுட்டிக் காட்டியது.

“பல்லின மக்கள் வாழும் மலேசியாவில் ஒவ்வொரு சமூகத்தின் கலாச்சாரச் சின்னங்களும் மொழி மரபுகளும் மதிக்கப்பட வேண்டும். உலக புகழ் அறிஞர் திருவள்ளுவரின் உருவத்தை அகற்றும் முயற்சி நாட்டின் பன்முக ஒற்றுமை கொள்கைக்கு எதிரானது,” என்றார் பரமசிவம் .

மலேசியத் தமிழர் சங்கம் தமிழ் மொழி, கல்வி, கலாச்சாரம் மற்றும் சமூக நலன் ஆகிய துறைகளில் பல தசாப்தங்களாகச் செயல்படும் முன்னணி அமைப்பாகும்.

நாட்டின் தமிழர் சமூகத்தின் உரிமைகள் மற்றும் முன்னேற்றத்தைக் காப்பதில் முக்கிய பங்காற்றி வருகிறது.