கோலாலம்பூர், மார்ச் 11-
மலேசியாவின் முன்னணி திரையரங்கு நிறுவனங்களில் ஒன்றான MBO சினிமாஸ் (MBO Cinemas Sdn Bhd), 23 ஆண்டுகள் திரைத்துறையில் பணியாற்றிய பிறகு, தனது அனைத்து கிளைகளையும் நிரந்தரமாக மூடுவதாக அறிவித்துள்ளது.
“திரையிடல் இனி நிறைவடைந்தது” என்று மிகவும் கனத்த இதயத்துடன் இந்த அறிவிப்பை வெளியிடுவதாக அந்நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தங்கள் திரையரங்குகளில் ரசிகர்கள் பகிர்ந்துகொண்ட கொண்டாட்டங்கள், மகிழ்ச்சி மற்றும் உணர்ச்சிகரமான தருணங்கள் அனைத்தும் தங்களுக்குப் பெருமை சேர்த்துள்ளதாக நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
பல ஆண்டுகளாகத் தங்களுக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு சேவை செய்ததை ஒரு கௌரவமாகக் கருதுவதாகவும் அவர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, 2020-ஆம் ஆண்டில் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக இத்திரையரங்குகள் மூடப்பட்டன. பின்னர், 2021-இல் கோல்டன் ஸ்கிரீன் சினிமாஸ் (GSC) இதன் சொத்துக்களைக் கைப்பற்றிய பிறகு, புதிய நிர்வாகத்தின் கீழ் மீண்டும் செயல்படத் தொடங்கியது.
தற்போது சிலாங்கூர், மலாக்கா, பேராக் மற்றும் ஜொகூர் ஆகிய மாநிலங்களில் உள்ள 8 கிளைகளும் இந்த முடிவினால் நிரந்தரமாக மூடப்படுகின்றன.

