கோலாலம்பூரில் , அக் 1-
வட்டி பிரச்சினை, திவால், கறுப்புப் பட்டியல் போன்ற பிரச்சினைகளில் சிக்கித் தவிப்போருக்கு அபய கரம் நீட்டுகிறது சாஸ்தா எனப்படும் சிலாங்கூர் சாஸ்தா உதவி அமைப்பு.
வாழ்க்கைச் செலவீனங்களைச் சமாளிக்க குறுகிய கால தீர்வாக நினைத்து வட்டி முதலைகளின் வலையில் சிக்குவோர் அப்பேர்வழிகள் விதிக்கும் கூடுதல் விகித வட்டியைச் சமாளிக்க முடியாமல் நிம்மதியை இழந்து நிற்கின்றனர்.
வாங்கிய வட்டியைச் செலுத்த முடியாதது ஒரு புறமிருக்க வட்டி முதலைகளிடமிருந்து விடுக்கப்படும் மிரட் டல், எந்த நேரத்திலும் என்ன நடக்குமோ என்ற அச்சம் போன்றவற்றோடு இவர்கள் வாழ்க்கையைக் கழிக்க வேண்டிய நிலை இவர்களுக்கு ஏற்படுகிறது.
இதுபோன்ற சூழ்நிலையில் இருந்து பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றி அவர்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தித் தரும் பணியில் தாங்கள் ஈடுபட்டிருப்பதாக சிலாங்கூர் சாஸ்தா உதவி அமைப்பின் தோற்றுனர் ராம்ஜி தெரிவித்தார்.
குறைந்த வருமானம், வேலையின்மை போன்ற காரணங்களால் அதிக வட்டிக்குக் கடன் வாங்குவோர் அதனைச் செலுத்த முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இத்தகைய சூழ்நிலையில் இருந்தவர்களில் 40 விழுக்காட்டினரின் பிரச்சினைகளுக்குத் தாங்கள் வெற்றிகரமாகத் தீர்வு கண்டிருப்பதாக அவர் விவரித்தார்.
அதே வேளையில், தற்போது ஆபத்து, அவசர தேவைகளுக்கு 500 மற்றும் 1000 வெள்ளி கடன் ஏற்பாட்டைத் தாங்கள் செய்து வருவதாகவும் இதற்குத் தகுதி பெற மாதம் 2,000 வெள்ளி சம்பளம் பெறுபவர்களாகவும் இ. பி. எஃப், சொக்சோ செலுத்துபவர்களாகவும் இருத்தல் வேண்டும் என்றார்.
இதனிடையே, தங்களின் சேவையை மலாய்க்கார சமூகத்தினருக்கு விரிவாக்கும் செய்யும் பொருட்டு மலேசிய இஸ்லாமிய பயனீட்டாளர் சங்கத்திடம் சாஸ்தா பேச்சு நடத்தி வருவதாக அவர் கூறினார்.
இச்சங்கத்துடனான சந்திப்பில் இம்முயற்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்க தாங்கள் தயாராக இருப்பதாக இதன் தலைவர் டத்தோ நட்சியம் ஜோஹான் உறுதி அளித்திருப்பதாகவும் ராம்ஜி சொன்னார்.
திவால், கறுப்புப் பட்டியல், கடன் பிரச்சினை போன்றவற்றில் சிக்கித் தவிப்போர் 03-77325503/ 03-77325502 எனும் எண்ணில் சாஸ்தா அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளலாம்.

