சென்னை, செப். 25-
இன்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு பேசிய ஓவியா, பிக்பாஸ் வீட்டில் தான் பாடிய ‘கொக்கு நெட்டக் கொக்கு…’ பாடலைப் பாடி ரசிகர்களை மகிழ்வித்தார்.

எனக்காகக் காத்திருந்த ரசிகர்களுக்கு நன்றி. இவ்வளவு அன்பு செலுத்தும் ரசிகர்கள் இருக்கும்போது நான் ஏன் ஒருவரை மட்டும் காதலிக்க வேண்டும் எனப் பேசியிருக்கிறார் ஓவியா. பிக்பாஸ் வீட்டில் ஆரவ் மீது கொண்ட காதலைக் கைவிட்டு விட்டதாக மறைமுகமாகத் தெரிவிப்பதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.

பிக்பாஸ் வீட்டில் துணிச்சலான பேச்சும் தனித்துத் தெரியும் குணமும் ஓவியாவுக்கு ரசிகர் படையை உருவாக்கின. அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் எலிமினேட் செய்யப்படுவதற்கு முன்பு ஓவியா ஆர்மி, சேவ் ஓவியா ஹேஸ்டேக்குகள் பிரபலமாயின.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 100-வது நாள் நிகழ்ச்சியில் தான் பங்கேற்க உள்ளதாகவும் அப்போது ரசிகர்களைச் சந்திப்பதாகவும் தெரிவித்தார் ஓவியா. இதனால் ஓவியா ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ரசிகர்களின் பெருத்த ஆதரவைப் பெற்றிருக்கும் ஓவியா விளம்பரங்களில் நடிப்பதற்கும், புதிய படங்களில் நடிப்பதற்கும் தனது சம்பளத்தைக் கணிசமாக உயர்த்தி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.