சென்னை, செப்.27 –

சுசீந்திரன் இயக்கத்தில் சந்தீப் கிஷன், விக்ராந்த், மெஹரீன் பிர்சாடா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சுசீந்திரன் இயக்கத்தில் சந்தீப் கிஷன், விக்ராந்த், மெஹரீன் பிர்சாடா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’.

‘அன்னை பிலிம் பேக்டரி’ சார்பில் ஆண்டனி தயாரித்துள்ள இப்படத்தில் சூரி, ஹரிஷ் உத்தமன், அப்புக்குட்டி, அருள்தாஸ், துளசி, சாதிகா உள்பட பலர் நடித்துள்ளனர். ஆக்‌ஷன் கலந்த குடும்ப படமாக உருவாகி இருக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார்.

தணிக்கைக் குழுவில் யு/ஏ சான்றிதழை பெற்றுள்ள இப்படம் தீபாவளிக்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தீபாவளிக்கு விஜய் நடிப்பில் `மெர்சல்’ படமும், அர்ஜுன் இயக்கத்தில் `சொல்லிவிடவா’, பரத் நடிப்பில் பொட்டு உள்ளிட்ட படங்கள் ரிலீசாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நெஞ்சில் துணிவிருந்தால்’ நவம்பர் 3-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக புதிய போஸ்டரை இயக்குநர் சுசீந்திரன் அவரது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

ஏற்கனவே கவுதம் கார்த்திக் நடிப்பில் `ஹரஹர மகாதேவகி’ தீபாவளிக்கு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு, பின்னர் ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.