கோலாலம்பூர், ஜூலை.31 –

இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் , நாட்டின் நிர்வாக மற்றும் மேம்பாட்டு செலவுகள், 2019-ஆம் ஆண்டு வரவு-செலவு திட்டத்திற்கு ஏற்ப பதிவாகி இருக்கிறது. 12 ஆயிரத்து 476 கோடியே 90 லட்சம் ரிங்கிட் அல்லது 48.01 விழுக்காடு நிர்வாக செலவிற்கும், இரண்டாயிரத்து 376 கோடியே 30 லட்சம் ரிங்கிட் அல்லது 43.34 விழுக்காடு மேம்பாட்டு செலவிற்கும் பயன்படுத்தப்பட்டிருப்பதாக நிதித்துறை துணை அமைச்சர் டத்தோ அமிருடின் ஹம்சா மேலவையில் தெரிவித்துள்ளார்.

2019-ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி வரைக்குமான மத்திய அரசாங்கத்தின் வருமான வரித் தொகை எட்டாயிரத்து 410 கோடி ரிங்கிட்டாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலவைக் கூட்டத்தில் புதன்கிழமை, 2019 வரவு-செலவுத் திட்டத்தின் தற்போதைய அடைவுநிலை குறித்து எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு அமிருடின் இவ்வாறு பதிலளித்தார்.

2019 ஆம் ஆண்டிக்கான மத்திய அரசாங்கத்தின் செலவீனங்கள் 31 ஆயிரத்து 455 கோடி ரிங்கிட்டாக கணிக்கப்பட்டிருக்கிறது.அதில் 25 ஆயிரத்து 985 கோடி ரிங்கிட் நிர்வாகச் செலவையும் ஐயாயிரத்து 470 கோடி ரிங்கிட் மேம்பாட்டு செலவையும் உட்படுத்தி இருப்பதாக அமிருடின் தெரிவித்தார்.