சுங்கை சிப்புட், ஏப். 22-பேராக், சுங்கை சிப்புட் மகாத்மா காந்தி கலாசாலை தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு இலவச கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

சுங்கை சிப்புட்  கல்வி, சமூக நலன் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்(இடபள்யூஆர்எஃப்) மற்றும் ஒப்டிமெக்ஸ் நிறுவனத்தின் கூட்டு ஏற்பாட்டில் நேற்று நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இப்பள்ளியைச் சேர்ந்த 265 மாணவர்கள் பங்கேற்றனர்.

இச்சோதனை நடவடிக்கையைத் தொடர்ந்து பார்வை குறைபாடு உள்ள மாணவர்களுக்கு மூக்குக் கண்ணாடிகள் இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவதற்கு கண் பராமரிப்பின் அவசியம் குறித்து இந்நிகழ்ச்சியில் விளக்கம் அளிக்கப்பட்டதாக சுங்கை  சிப்புட் இடபள்யூஆர்எஃப் தலைவர் நோவிந்தன் கூறினார்.

கண் பார்வை கோளாறினால் மாணவர்கள் படிப்பில் பின்தங்கிவிடக் கூடாது என்பதே தங்களின் தலையாய நோக்கம் என்றார் நோவின்.

உடல் ஆரோக்கியம் மற்றும் மாணவர்களின் கல்வி முன்னேற்றம் ஆகியவற்றில் இடபள்யூஆர்எஃப் காட்டி வரும் அக்கறையையே இந்நடவடிக்கை காட்டுகிறது என்று அவர் மேலும் சொன்னார்.