ஈரான் அழியப் போகிறது, இஸ்ரேல் சிதறப் போகிறது என்றெல்லாம் செய்திகள் வெளி வந்தவாறு இருக்கின்றன. ஆனால், இந்தப் போர் குறித்து முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும் எனில், இந்த 4 விஷயங்களை தெரிந்துகொள்ள வேண்டும். இதைப் பற்றித்தான் இந்தக் கட்டுரை விவரிக்கிறது.
1. போருக்கு நடுவே சிக்கியுள்ள மக்கள்
வழக்கமாகப் போர் நடக்கிறது எனில், அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்படுவார்கள். அல்லது மக்கள் அங்கிருந்து வெளியேறும் வரை காத்திருப்பதுதான் நியதி. ஆனால் ஈரான் மீது முதலில் குண்டு வீசிய இஸ்ரேல், இதை எதையும் செய்யவில்லை. இப்போது போர் தீவிரமடைந்திருப்பதால், லட்சக்கணக்கான மக்கள் போருக்கு நடுவே இரு நாடுகளிலும் சிக்கியுள்ளனர்.
எந்த இடங்களில் தாக்குதல் நடக்கிறது? எப்படி தற்காத்துக் கொள்வது என்பது பற்றி இஸ்ரேலிய அரசு தங்களுக்கு எந்த அறிவுறுத்தலையும் வழங்கவில்லை என்று அந்நாட்டு மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அரசு தரப்பில் எங்களுக்கு எந்த நடைமுறை ஆலோசனைகளையும் வழங்குவதில்லை. எந்த இடங்களைத் தவிர்க்க வேண்டும், எந்த இடங்களுக்குச் செல்வது, பாதுகாப்பானது என்பது குறித்து எந்தத் தகவலும் கொடுக்கப்படுவதில்லை. அவர்கள் அதைப் பற்றிப் பேசவே இல்லை என்று இஸ்ரேலிய மக்கள் கூறுகின்றனர்.
2. ஈரானின் அணுசக்தி தளங்களை அழிப்பது எளிதான காரியமல்ல
இரண்டாவது விஷயம் ஈரானை தாக்குவது. ஈரானின் அணுசக்தி நிலையங்கள் நிலத்தடியில் இருக்கின்றன. குறிப்பாக தெஹ்ரானுக்கு தெற்கே நடான்ஸ் மற்றும் ஃபோர்டோவில் உள்ள அணுசக்தி நிலையங்கள் மலையை குடைந்து அதற்குள் கட்டப்பட்டிருக்கின்றன.இவற்றைத் தாக்கி அழிப்பது இஸ்ரேலுக்கு சுலபமான காரியம் கிடையாது.
சமீபத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் நடான்ஸ் அணுசக்தி மையம் பாதிக்கப்பட்டிருக்கலாம். ஆனால், ஃபோர்டோ அணுசக்தி நிலையம் மிகக்குறைந்த பாதிப்பைத்தான் சந்தித்திருக்கும். இதைத் தாக்கி அழிக்கும் வகையில் இஸ்ரேலிடம் சக்தி வாய்ந்த ஆயுதங்கள் இல்லை.
3. இஸ்ரேலின் தெளிவில்லாத முடிவு
கடந்த 16ஆம் தேதி செய்தியாளர் சந்திப்பில் பேசிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, இஸ்ரேலின் தாக்குதல்கள், ஈரானின் அணுசக்தித் திட்டத்தை மிக நீண்ட காலத்திற்கு பின்னுக்குத் தள்ளிவிட்டது. ஆனால், தாக்க வேண்டிய இலக்குகள் இன்னும் நிறைய இருக்கின்ன என்று கூறியிருந்தார். சரி, ஈரானிய அரசாங்கம் வீழ்ச்சியடையும் வரை இஸ்ரேல் தொடர்ந்து தாக்கத் திட்டமிட்டுள்ளதா என்று செய்தியாளர் கேள்வி எழுப்பியிருந்தனர். அதற்கு, ஈரானின் அணுசக்தி திறன்களை அகற்றுவதே முக்கிய குறிக்கோள். அவர்களின் ஆட்சி மிக பலவீனமாக இருக்கிறது என்று நெதன்யாகு கூறினார்.
அதே நாளில், ஏபிசி நியூஸுக்கு அளித்த பேட்டியில், ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனியைக் கொல்வது மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் என்றும் கூறியுள்ளார். இப்படி மாறி, மாறி பேசுவது இஸ்ரேலின் தெளிவில்லாத நிலைப்பாட்டை விளக்குவதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.
ஒபாமா ஜனாதிபதியாக இருந்தபோது இஸ்ரேலுக்கான தூதராகப் பணியாற்றிய ஷாபிரோ இது குறித்து கூறுகையில், இஸ்ரேலின் குறிக்கோளை நான் நியாயமானதாகக் கருதவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.
4. அமெரிக்காவின் தலையீடுக்கு வாய்ப்பு
சர்வதேச அமைதிக்கான குழுவின் உறுப்பினர் ஆரோன் டேவிட் மில்லர், அமெரிக்காவின் எஃப்35 போர் விமானத்தை இஸ்ரேல் வைத்திருக்கிறது. ஆனால், ஈரானுக்கு இது மட்டுமே போதாது. பி-2 ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானங்களும், மலையைக் குடைந்து உள்ளே உள்ள இலக்குகளைத் தாக்குவதற்காகத் தயாரிக்கப்பட்ட அமெரிக்காவின் தனிச் சிறப்பான வெடிகுண்டு, இஸ்ரேலிடம் இல்லை. இதனால் இஸ்ரேல் இந்தப் போரில் கொஞ்சம் பின்தங்கியே உள்ளது.
ஈரான் கொஞ்சம் தாக்குதலை தீவிரப்படுத்தினால், இஸ்ரேலுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்படும். இது சர்வதேச அளவில் அமெரிக்காவின் பலவீனமாக பார்க்கப்படும். எனவே, நிலைமையைச் சமாளிக்க, இஸ்ரேலுக்காக அமெரிக்கா நேரடியாக போரில் இறங்க வாய்ப்பு இருக்கிறது. இது நடந்தால் போர் பெரிய அளவில் விரிவடையும் என்று கூறியுள்ளார்.
-ஹெலே கார்திக் (ஒன் இந்தியா)
மொழியாக்கம்:பொன் முனியாண்டி

