கோலாலம்பூர், மார்ச் 11-

சட்ட அமலாக்கமானது ஒரு தரப்பிற்கு மட்டும் சாதகமாகச் செயல்படக் கூடாது என்றும், தவறு செய்யும் இரு தரப்பினர் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ டாக்டர் முகமட் அக்மால் சாலே வலியுறுத்தியுள்ளார்.

 

சமீபத்தில் இந்துக்களின் புனிதச் சின்னமான திரிசூலத்தை ஒருவர் காலால் மிதிப்பது போன்ற காணொளி சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் செயலைக் கண்டித்த டாக்டர் அக்மால், அதே வேளையில் இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து நடந்த வன்முறைச் செயல்களையும் கடுமையாகச் சாடினார்.

 

திரிசூலத்தை அவமதித்த நபர் மீது மட்டும் நடவடிக்கை எடுத்தால் போதாது; சட்டத்தை முறையாகப் பின்பற்றி இரு தரப்பிலும் உள்ள குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

 

திரிசூலச் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாகக் கூறிக்கொண்டு, வீடுகளைத் தாக்குவது, பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்துவது மற்றும் வாகனங்களுக்குத் தீ வைப்பது போன்ற அராஜகச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீதும் போலிஸ் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.