தெலுக் இந்தான், மார்ச் 9-
தமிழ்மொழியில் நிறைந்துள்ள இலக்கியங்கள் படிப்பவர்களை புத்துணர்ச்சிக்கு உட்படுத்தி அவர்களின் மனங்களைச் செம்மைபடுத்துவதோடு காலந்தோறும் புதிய வாழ்க்கைப் பாடங்களை ஏற்படுத்துவதாக தஞ்சோங் மாலிம், சுல்தான் இட்ரிஸ் கல்வியல் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை விரிவுரையாளர் முனைவர் சாமிக்கண்ணு தெரிவித்தார்.
மனித உணர்வுகளுக்குத் தேவையான எல்லாவித ஊட்டச்சத்துகளையும் தமிழ் இலக்கியங்கள் கொண்டிருப்பதாகவும் அவை எல்லாக் காலத்திற்கும் பொருந்துவனவாக அமைந்து இருப்பதோடு தேவைப்படுவோருக்கு அள்ளிக் கொடுக்கும் ஆற்றலையும் கொண்டிருப்பதாகவும் அவர் பேசினார்.
நேற்று இங்குள்ள திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளியில் தமிழ் இலக்கியக் கழகத்தினர் ஏற்பாட்டில் நடைபெற்ற 115ஆவது இலக்கியக் களத்திற்குத் தலைமையேற்ற அவர் தமதுரையில் பேசினார்.
இந்த இலக்கியங்களை தமிழரிடையே மிகச் சிறந்த பணியை மேற்கொண்டிருக்கும் தமிழ் இலக்கியக் கழகத்திற்குத் தமது நன்றியை தெரிவித்துக் கொண்ட அவர், இளைஞர்களை அதன் பக்கம் கொண்டு வரவும், அவற்றைப் படிக்க அதிக ஆர்வத்தை ஏற்படுத்தலாம் என்றும் தேவையான நடவடிக்கைகளை கழகம் மேற்கொள்வது அவசியம் என்றும் முனைவர் சாமிக்கண்ணு தெரிவித்தார்.
அடுத்த தலைமுறையினர் நன்னெறி, நல்லொழுக்கம் மற்றும் உயர்ந்த பண்புகளோடு நிறைவாக வாழ்வதற்கும் மேலும் நாட்டிற்கு தேவைப்படும் சிறந்த மனித மூலதனத்தைத் தரத்தக்கவராக அவர்கள் திகழ தமிழ் இலக்கியங்கள் அவர்களுக்குப் பெரிதும் உதவும் என்பதால் அவற்றை இவர்களிடம் சேர்ப்பது அவசியம் என்றார் அவர்.