கோலாலம்பூர், 24 ஜூன் 2022–
மலேசிய இந்திய இளைஞர் மன்றம் (MIYC) ஜூன் 19 அன்று அதன் நிகராளிகளின் 27வது ஆண்டுப் பொதுக் கூட்டத்தை (MPAT) வெற்றிகரமாக நடத்தி முடித்தது.
2019/2022 தவணை தலைவரான சகோதரர் தனேஷ் பாசில், மற்ற வேட்பாளர்களோடு போட்டியிட்டு 2022/2025 தவணை தலைவராக தனது பதவியைத் தக்க வைத்துக் கொண்டார். தலைவர் பதவியைத் தவிர, செயலை, உட்கணக்காய்வாளர் போன்ற பதவிகளுக்கும் போட்டிகள் நடைபெற்றன. இதர பதவிகளுக்கான வேட்பாளர்கள் போட்டியின்றி வெற்றி பெற்றனர்.
27வது முறையாக நடைப்பெறும் இப்பொதுக்கூட்டம் கோலாலம்பூரில் உள்ள அனைத்துலக இளைஞர் மையத்தில் நடந்தேறியது. இதில் 11 மாநிலங்களில் இருந்து, அதாவது பெர்லிஸ் முதல் சபா வரை, மொத்தம் 279 நிகராளிகள் பங்கேற்றனர்.

மலேசிய இளைஞர் பேரவைத் தலைவர் துவான் முகம்மது இசாத் அஃபிஃபியால் இந்தப் பொதுக்கூட்டம் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைககப்பட்டது.
மேலும், தேசிய இளைஞர் – விளையாட்டுத் துறையின் இளைஞர் மேம்பாட்டு உதவி இயக்குநர் சாலிஹா பிந்தி அபு பக்கார், மலேசிய இந்திய இளைஞர் பேரவையின் நிரந்தர ஆலோசகர் டத்தோ டாக்டட் குமரராஜா, ஆகியோரும் கலந்து கொண்டனர்.
புதிய தலைவர் தனேஷ், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான மன்றத்தின் திட்டங்களை முன்வைத்தார். அதில், 22 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு அதிகாரம் அளிப்பது, 668 – ஆவது சட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கான வயது வரம்பை 30 ஆகக் குறைப்பது போன்றவை அடங்கும்.
நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்ட 668 சட்டத் திருத்தத்தை செயல்படுத்தும் தேதி குறித்து ஒவ்வோர் இளைஞர் அமைப்பும் மாற்றத்திற்காக போராடிக் கொண்டு வருகிறது. கிளைகள் முதல் தேசிய அளவிலான இளைஞர் அமைப்புகள் 15 முதல் 30 வயது வரை உள்ள இளைஞர்களின் தலைமைத்துவத்தைப் பெற பெரிதும் பாடுபடுகின்றனர். எனவே, மலேசிய இந்திய இளைஞர் மன்றம் இளைஞர்களின் பங்கேற்பை அதிகரிக்க, 15 முதல் 22 வயதிற்குட்பட்ட இளைஞர்களுக்கு அதிகாரம் அளிப்பதோடு மட்டும் இல்லாமல் இளைஞர் அமைப்பின் நிகழ்ச்சி நிரலைத் தொடரும் திறனையும் விரிவான தன்மையையும் கொண்ட தலைவராவதற்கு முட்டிவெடுத்துள்ளது. இத்திட்டம் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து நிகராளிகளிடமிருந்தும் ஆதரவையும் வரவேற்பையும் பெற்றது.

தொடந்து, தேவையான தகவல் பரிமாற்றம் (MYKD) போன்ற ஆவணங்களைச் சரிசெய்வதற்கு வசதியாக, மேலாண்மை அமைப்பை நிகழ்நிலையில் (online) தழுவி, கிளை மட்டத்திலிருந்து தேசிய மட்டம் வரை திறமையான நிர்வாகத்தை உருவாக்கவும் மன்றம் விரும்புகிறது.
பல இளைஞர்களை உலகத் தரம் வாய்ந்த திறமைசாலிகளாக உருவாக்க தொழில்நுட்பமு தொழில் பயிற்சிக் கல்வி (TVET) முறையை உயர்த்தவும் மன்றம் மறக்கவில்லை. இந்தத் திட்டத்தை நனவாக்க, கல்வி வாய்ப்புகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், TVET கல்வி பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புகளையும் வழங்க, நாடு முழுவதும் உள்ள திறன் பயிற்சி நிறுவனங்களுடன் இணைந்து கொள்வதற்கான முயற்சிகளை மன்றம் மேற்கொண்டு வருகிறது.
31 ஆண்டுகளாக வீற்றிருக்கும் இளைஞர் அமைப்பான மலேசிய இந்திய இளைஞர் மன்றம், இந்திய சமூகத்தின் இளைஞர்களின் சமூக -பொருளாதார மேம்பாட்டை வலுப்படுத்தும் தனது நோக்கத்திலிருந்து எப்போதும் விலகுவதில்லை என தனேஷ் பாசில் குறிப்பிட்டார்.

