கோலாலம்பூர், அக். 15
இவ்வாண்டுக்கான டான்ஸ்ரீ கே. ஆர். சோமா மொழி, இலக்கிய அறவாரியத்தின் இலக்கிய போட்டிகளில் சிறுகதை பிரிவில் பேராக், சித்தியவானைச் சேர்ந்த அஞ்சலை நல்லப்பன் முதல் பரிசை தட்டிச் சென்றார்.
தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கத்தின் டான்ஸ்ரீ கே. ஆர் சோமா மொழி, இலக்கிய அறவாரியம் 30 ஆம் ஆண்டாக நடத்திய இந்த இலக்கிய விழாவில் சிறுகதை பிரிவில் இரண்டாவது, மூன்றாவது பரிசுகளை முறையே வைரக்கண்ணு சாத்தையாவும், பொன்னம்மாள் ஆண்டியும் வென்றனர்.
அடைக்கலம் பழனியாண்டி, கதிரேசன் மோகன், சுமத்ரா ஐமன்னன் ஆகிய மூவர் ஆறுதல் பரிசுகளைப் பெற்றனர்
இங்குள்ள விஸ்மா துன் சம்பந்தன்,டான்ஸ்ரீ கே. ஆர் சோமா அரங்கில் நேற்று நடைபெற்ற இந்த அறவாரியத்தின் இலக்கிய போட்டிகளின் வெற்றியாளர்களுக்கான பரிசளிப்பு விழாவை அதன் பொறுப்பாளர் கரு. பன்னீர் செல்வம் செவ்வனே வழிநடத்தினார்.
சிறுகதை, மரபு, கவிதை, புதுக்கவிதை, கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக 2,500 வெள்ளியும், இரண்டாவது பரிசாக 1,750 வெள்ளியும், மூன்றாவது பரிசாக 1,250 வெள்ளியும், ஆறுதல் பரிசுகளாக தலா 500 வெள்ளியும் வழங்கப்பட்டன.
வெற்றியாளர்களுக்கு தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கத்தின் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ கே. ஆர். சோமசுந்தரம் பரிசு தொகைக்கான காசோலைகளை வழங்கிய வேளையில் நிர்வாக இயக்குநர் டத்தோ பா. சகாதேவன் சான்றிதழ்களை வழங்கினார்.
அடுத்து, மரபுக் கவிதை பிரிவில் முதல் பரிசை சரஸ்வதி உலகன், இரண்டாவது பரிசை சரவணன் ராமச்சந்திரன், மூன்றாவது பரிசை தனசேகரன் கொராக்கி ஆகியோர் வென்ற வேளையில் குமார் துரைராஜூ, புஷ்பலீலாவதி ஆறுமுகம் மற்றும் மாரிமுத்து காசி ஆகியோர் ஆறுதல் பரிசுகளைப் பெற்றனர்.
கட்டுரை பிரிவில் முதல் பரிசு குமாரசாமி தண்ணீர்மலை, இரண்டாவது பரிசு புஷ்பமலர் கோவிந்தராஜூ, மூன்றாவது பரிசு கோவிந்தராஜூ சின்னசாமி ஆகியோருக்குக் கிட்டிய வேளையில் முத்தரசு ராமசாமி, குணநாதன் ஆறுமுகம் மற்றும் மாதவன் நடராஜன் ஆறுதல் பரிசுகளுக்குத் தேர்வாகினர்.
மாணவர்களுக்கான சிறுகதை பிரிவில் நவீன் கணேசனுக்கு முதல் பரிசும், தீப தர்ஷினி குமரேஸுக்கு இரண்டாவது பரிசும் லிஷாலினி சேதுக்கு மூன்றாவது பரிசும் கிட்டின. தென்றல் முருகையன், தினேஷ் மஷாமுனி, தனசேகரன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆறுதல் பரிசுகளைப் பெற்றனர்.
எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில் டான்ஸ்ரீ கே. ஆர் சோமா மொழி,இலக்கிய அறவாரியம் நடத்திய இலக்கிய போட்டிகளில் இறுதியாக புதுக் கவிதை பிரிவில் மகேந்திரன் நவமணி முதல் பரிசையும், உதயகுமாரன் கந்தசாமி இரண்டாவது பரிசையும், கதிரவன் பட்டன் மூன்றாவது பரிசையும் பெற்றனர். தமிழ்ச்செல்வி நளதிருவன், சந்தியாவும் மரியசூசை மற்றும் மரினா தேவி சண்முகம் ஆகியோர் ஆறுதல் பரிசுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

