கோலாலம்பூர், மார்ச் 4-
பல்லின சமூகங்களைப் பிரதிநிதிக்கும் மைபிபிபிக்கு புதுத் தோர்றத்தை ஏற்படுத்தும் வகையில் கட்சியின் சின்னம் மற்றும் விதிமுறைகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என்று கூறப்பட்டது.
கட்சி அடுத்த இலக்கை நோக்கி பயணம் செய்வதற்கு இத்தகைய மாற்றங்கள் மிக அவசியம் என்று இக்கட்சியின் இடைக்கால தேசிய தலைவர் டத்தோ லோக பாலா தெரிவித்தார்.
இவ்விவகாரம் வரும் ஜூன் மாதம் நடைபெறவிருக்கும் கட்சியின் பொதுப் பேரவைக்குக் கொண்டு செல்லப்பட்டு சங்க பதிவகத்தின் அங்கீகாரத்திற்காக விண்ணப்பம் செய்யப்படும் என்று இங்குள்ள மைபிபிபி தலைமையகத்தில் இக்கட்சியின் உச்சமன்ற கூட்டத்திற்குப் பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
“பொதுப் பேரவைக்குத் தயாராகும் வகையில் இதுவரை 2,800 கிளைகள் மற்றும் 98 தொகுதிகள் ஆண்டு கூட்டங்களை நடத்திவிட்டன. அதே சமயம், சிலாங்கூர் மாநிலம் கடந்த மாதம் தனது ஆண்டு கூட்டத்தை நடத்தியது.. இந்நிலையில் கூட்டரசு பிரதேசம் இம்மாதம் 31ஆம் தேதியும் பினாங்கு வரும் மே 5ஆம் தேதியும் தங்களின் ஆண்டு கூட்டங்களை நடத்தும்” என்று அவர் விவரித்தார்.
கட்சி சட்ட விதிகளில் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள் குறித்து தொடர்ந்து பேசிய அவர் தேசிய தலைவரின் தவணை காலம், துணைத் தலைவர் பதவி போன்ற விவகாரங்களை இவை உட்படுத்தியிருக்கும் என்றார்.
நாட்டின் அரசியல் நிலைத்தன்மை பெறுவதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் அரசாங்கத்திற்கு பிளவுபடாத ஆதரவு தரும் நிலைப்பாட்டை கட்சி கொண்டிருப்பதாக லோக பாலா மேலும் சொன்னார்.
உணவக வாடகை கட்டண அதிகரிப்பு, எஸ்எஸ்டி வரி அதிகரிப்பு, உணவு பொருட்கள் விலை அதிகரிப்பு உள்ளிட்ட மக்களுக்குப் பெரும் சுமையை ஏற்படுத்தும் விவகாரங்களை பிரதமரின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் பொருட்டு அவரை விரைவில் தாங்கள் சந்திக்கத் திட்டமிடிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இச்செய்தியாளர் கூட்டத்தில் கட்சியின் தேசிய உதவி தலைவர் டத்தோ மோகன் கந்தசாமி, பொருளாளர் டல்ஜிட் சிங், தகவல் பிரிவு தலைவர் ஸ்டீவன் எசெலின் .ஃபெர்ணாண்டஸ், தகவல் பிரிவு துணைத் தலைவர் குமார், மகளிர் பிரிவு தலைவி புனிதா முனுசாமி ஆகியோரும் கலந்து கொண்டனர்.