செமினி, ஜூன் 11-
7ஆவது சிலாங்கூர் கராத்தே தோ கொஜுகாய் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை செமினி சமூக மண்டபத்தில் நடைபெற்றது
காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற்ற இப்போட்டியில் 4 வயது முதல் 17 வயதுக்குட்பட்ட சுமார் 200 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் உலு லங்காட் பி.கே.ஆர். தொகுதி தலைவர் ராஜன் முனுசாமியின் பிரதிநிதிகளாக காஜாங் நகர திட்டமிடல் சங்க உறுப்பினர்கள் சந்திரன் ராமசாமி, ராமச்சந்திரன் அர்ச்சுணன் ஆகிய இருவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாஸ்டர் சிதம்பரம் கலந்து கொண்டார்.

காஜாங், செமினி, பத்துமலை, செராஸ் மற்றும் செலாயாங் பாரு பகுதிகளைச் சேர்ந்த 400 மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்றனர்.
10 பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் தலா 4 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கடந்த முறை 130 பேர் மட்டுமே பங்கேற்ற நிலையில், இம்முறை மாணவர் எண்ணிக்கை 200 ஆக உயர்ந்துள்ளது.
“இந்தப் போட்டியின் முக்கிய நோக்கம் சிறந்த விளையாட்டு வீரர்களைக் கண்டறிந்து அவர்களை மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பிரதிநிதித்துவப்படுத்துவதாகும். ஒவ்வொரு மாதமும் ஆங்காங்கே போட்டிகள் நடப்பதால், இங்கு போட்டி நடத்தி சிறந்த விளையாட்டாளர்களைத் தேர்வு செய்து அழைத்துச் செல்வோம்,” என்றார் பிரபாகரன்.