பத்துமலை, ஆக 4-

ஸ்ரீ முருகன் நிலையத்தின் கல்வி யாத்திரை பத்துமலை திருத்தலத்தில் மிகச் சிறப்பான முறையில் நடைபெறுவதற்கு இடத்தையும், இதர வசதிகளையும் ஏற்படுத்தித் தந்த ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலய தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ டத்தோ ஆர். நடராஜாவிற்கு இக் கல்வி நிலையம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டது.

“பத்துமலை திருத்தலத்தில் கடந்த 31 ஆண்டுகளாக ஸ்ரீ முருகன் நிலையம் கல்வி யாத்திரையை நடத்தி வருகிறது. இந்த யாத்திரை சுமூகமான முறையில் நடைபெறுவதற்கு டான்ஸ்ரீ நடராஜா இடம் உட்பட அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தித் தருகிறார்.  இதன் வெற்றிக்கு டான்ஸ்ரீயின் ஒத்துழைப்பே மூல காாரணம.  இதற்காக அவருக்கு இவ்வேளையில் நாங்கள் மனமுவந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் “ என்று இந்நிலையத்தின் கல்வி பிரிவின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீ கணேஷ் குறிப்பிட்டார்.

அவ்வகையில் இவரின் ஒத்துழைப்போடு நேற்று பத்துமலையில் 31ஆவது கல்வி யாத்திரை பக்தி உணர்வுடன் சீரிய முறையில் நடைபெற்றது.

“பினாங்கு தொடங்கி ஜொகூர் வரையிலான நாட்டின் பல மாநிலங்களில் இருந்து 5,000 திற்கு மேற்பட்ட மாணவர்கள் தங்கள் பெற்றோர்களோடு இதில் கலந்து கொண்டது கல்வியின்பால் இவர்கள் கொண்டிருக்கும் அக்கறையையும், ஆர்வத்தையும் பறைசாற்றியது” என்றார்.

இதற்காக பெற்றோர்கள், நிலையத்தின் முன்னாள் மாணவர்கள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் நன்றி கூறினார் ஸ்ரீ கணேஷ்.