கோலாலம்பூர்:

உயர்கல்வியைத் தொடரும் பி40,எம்40 பிரிவு மாணவர்களுக்குப் பதிவு கட்டணம், அடிப்படை உபகரணங்கள், முதல் ஆறு மாதத் தங்குமிடச் செலவுகள் போன்றவற்றுக்கு ஆரம்பக் கட்ட உதவிநிதிகள் வழங்க உயர்க்கல்வி அமைச்சு பரிசீலிக்க வேண்டும் என சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் யுனேஸ்வரன் வலியுறுத்தினார்.

இந்நிலையில், யுனேஸ்வ்ரனின் பரிந்துரைக்குப் பதிலளிக்கும் விதமாக உயர்க்கல்வி அமைச்சகம் தற்போதைய நடவடிக்கைகளை தெரிவித்துள்ளது.

நிதிசிக்கலை எதிர்கொள்ளும் புதிய மாணவர்கள் முதலில் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பதிவு செய்யும் வசதி வழங்கப்படுவதற்காக, அனைத்து அரசுப் பல்கலைக்கழகங்களுடனும் இணைந்து ஒருங்கிணைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக உயர்க்கல்வியமைச்சு கூறியது.

மேலும், மாணவர்களின் சமூகப்–பொருளாதார நிலையை அடிப்படையாகக் கொண்டு அவர்களின் பதிவு கட்டணத்தை பின்னர் செலுத்தும் வசதி வழங்கப்பட்டுள்ளதாகவும் உயர்கல்வி அமைச்சு விளக்கமளித்துள்ளது.

அரசுப் பல்கலைக்கழகங்கள், மாணவர்களின் ஆரம்ப கட்ட கட்டணத்திற்கான ஆரம்ப நிதி உதவியும், பதிவு செய்ய பல்கலைக்கழகத்திற்கு செல்ல தேவையான பயண மற்றும் ஏற்பாடுகளுக்கான உதவியும் வழங்குவதாக உயர்க்கல்வியமைச்சு கூறியது.

மேலும், மாணவர்களை அழைத்து வரும் குடும்பத்தினருக்குத் தேவையானபோது பல்கலைக்கழக விடுதி வசதியும் ஏற்பாடு செய்யப்படுகிறது என்று உயர்கல்வி அமைச்சு விளக்கமளித்துள்ளது.