ஜொகூர் பாரு:

ஜொகூர் பதஞ்சலி அஷ்டாங்க யோகா பயிற்சி மையத்தின் மாணவர்கள் குழுவாக இணைந்து 19 நிமிடம் 37 விநாடிகளில் 108 சூரிய நமஸ்காரம் செய்து மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தனர்.

மார்ச் 28-ஆம் தேதி டேவான் புத்ரி வங்சாவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சுமார் 79 மாணவர்கள் நிர்ணயிக்கப்பட்ட 30 நிமிட இலக்கை விட வேகமாக 108 சூர்ய நமஸ்காரத்தை விரைவாக செய்துள்ளனர்.

இதன் மூலம் குழுவாக மிக விரைவாக108 சூர்ய நமஸ்காரத்தை நிறைவு செய்தலுக்கான சான்றிதழை மலேசிய சாதனை புத்தக நிறுவனத்தின் அதிகாரிகள் வழங்கினர்.

ஜொகூர் பதஞ்சலி அஷ்டாங்க யோகா பயிற்சி மையத்தின் இயக்குநரும் மூத்த அஷ்டாங்க யோகா மாஸ்டருமான மாஸ்டர் தாமரைசெல்வி சுகுமாரன், இந்த சாதனையை தனிப்பட்ட முறையில் செய்ய முடிந்திருந்தாலும், அந்த வாய்ப்பை அடுத்த தலைமுறைக்கு வழங்க விரும்பியதாகவும், இந்த வெற்றி மாணவர்களுக்கே சொந்தமானது என்றும் தெரிவித்தார்.

மேலும், இந்தச் சாதனையில் ஆட்டிசம் மாணவர்களும் 108 சூர்ய நமஸ்காரத்தை வெற்றிகரமாக முடித்ததுடன், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டு வரும் மாணவர் ஒருவரும் தனது திறனை மேம்படுத்தி சாதனையை நிறைவு செய்ததாக மாஸ்டர் தாமரைசெல்வி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் டேசா செமர்லாங் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியை திருமதி.செல்லம்மா, ஜொகூர் மாநில கல்வித் துறையின் பாலர் பள்ளி துணை இயக்குநர் திரு.ரவிசந்திரன்,ஜொகூர் எம்பிஎன் திரு.பிரகாஷ் மணியம் உட்பட இன்னும் பலர் சிறப்பு பிரமுகர்களாகக் கலந்து கொண்டனர்.

இலக்கை அடைய உறுதுணையாகச் செயல்பட்ட செயற்குழு உறுப்பினர்கள் உட்பட அனைவருக்கும் மாஸ்டர் தாமரைசெல்வி நன்றி தெரிவித்தார்.