ஜோர்ஜ்டவுன், ஜன.28-
தனது ஐபோன் 6 கைப்பேசி காணாமல் போனது குறித்து இரண்டாம் படிவ மாணவி வசந்தபிரியாவிடம் காரசாரமாக விசாரணையை ஆசிரியை ஒருவர் மேற்கொண்டதால் மனமுடைந்துபோன வசந்தபிரியா தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இவ்விவகாரம் குறித்து நாடு தழுவிய நிலையில் பலர் தங்களின் அதிருப்திகளைத் தெரிவித்துவரும் நிலையில் அந்த ஆசிரியை நிபோங் தெபால் மெதடிஸ்ட் இடைநிலைப்பள்ளியிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பினாங்கு மாநில கல்வித் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து பினாங்கு கல்வி இலாகா விசாரணையை மேற்கொண்டு வருகின்றது. தற்போது, அந்த ஆசிரியை நிபோங் திபாலிலுள்ள அந்த இடைநிலைப்பள்ளியில் இருந்து மாற்றப்பட்டிருப்பதாக வசந்தபிரியாவை செபராங் ஜெயா மருத்துவமனையில் நேரில் சென்று பார்த்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பினாங்கு மாநில கல்வித்துறை துணைத் தலைமை இயக்குனர் முகம்மட் ஜமால் முகம்மட் தெரிவித்தார்.
இது தொடர்பான விசாரணை முடியும் வரையில் அந்த ஆசிரியை பள்ளியிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளார். அவர் தென் செபராங் பிறை மாவட்ட கல்வி இலாகாவில் வைக்கப்படுவார்.
இவ்விவகாரத்தில் எந்தத் தரப்பு தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து போலீசும் புகாரைப் பெற்றுள்ளது. இந்த விசாரணையில் யாரும் தற்காக்கப்பட மாட்டார்கள் என துணைக் கல்வி இயக்குனர் மகம்மட் ஜமால் கூறினார்.