பெட்டாலிங் ஜெயா, மார்ச் 4-
மலேசிய தெலுங்கு சங்கத்தின் செயல்பாடுகள் திறன்மிக்கதாக உள்ளது. அவை பாராட்டுதல்களுக்கு உரியவை என பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் மரியா சின் தெரிவித்தார்.
மலேசிய தெலுங்கு சங்கம் (மகளிர் பிரிவு), இந்திய புற நகர் மேம்பாட்டு அமைப்புடன் இணைந்து உலக தெலுங்கு மகளிர் மாநாட்டை அண்மையில் ஏற்பாடு செய்து நடத்தினர். இம்மாநாட்டை அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்த அவர் தமதுரையில் மேற்கண்டவாறு பேசினார்.
இந்த மாநாடு கடந்த மார்ச் 2ஆம் தேதி துவங்கி 3ஆம் தேதி வரை சுமார் இரு நாட்களுக்கு சுபாங் ஜெயாவில் உள்ள விடுதியொன்றில் நடைபெற்றது. மலேசியா, சிங்கப்பூர், இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து சுமார் 250க்கும் மேற்பட்ட பேராளர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.
நடைபெற்ற இந்த மாநாட்டில் சமூகம், கல்வி, பொருளாதாரம் என பல்வேறு அம்சங்களில் பெண்களின் பங்களிப்பும் அதனை மேம்படுத்தும் வழி வகைகள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டன. தகுதி பெற்ற வல்லுனர்களும் உரை நிகழ்த்தினர்.
இந்த மாநாட்டின் துவக்க விழாவில் மரியா சின் உடன் மலேசிய தெலுங்கு சங்கத் தலைவர் டத்தோ அக்சயகுமார், இந்திய புற நகர் மேம்பாட்டு அமைப்பின் தலைவர் வினய் குமார், சிலாங்கூர் மாநில மகளிர் மேம்பாட்டு இலாகாவின் இயக்குனர் நஸ்மா ஷாப்பினி, சிங்கப்பூரின் குடியுரிமை பெறாத இந்தியர் கூட்டமைப்பின் இயக்குனர் சுனிதா ரெட்டி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
டத்தோ அக்சயகுமார் உரையாற்றுகையில், இன்றைய சூழ்நிலையில் பெண்கள் பல தரப்பட்ட துறைகளில் சாதனை புரிந்து வருகின்றனர். இது தொடர வேண்டும். அதற்கு அரசாங்கமும் இயக்கங்களும் மக்களும் துணை நிற்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இதற்கிடையே நடைபெற்ற இந்த நிகழ்வில் சமூகத்தில் பல சாதனைகள், சேவைகள் புரிந்த பெண்களுக்கு சாதனையாளர் விருதும் வழங்கி கெளரவிக்கப்பட்டது. மலேசிய தெலுங்கு சங்கத்தைச் சேர்ந்த சரோஜினி தேவி, தனலட்சுமி, ஜெயலட்சுமி, சரஸ்வதி, சந்தான தேவி ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. டத்தோ அட்சய குமாரும் மரியா சின்னும் அவர்களுக்கு விருதினை எடுத்து வழங்கி கெளரவித்தனர்.

