கோலாலம்பூர், மார்ச், 4–
பேரா, தாப்பாவில் கட்டப்பட்டு வரும் ஸ்ரீ ஜெகநாதர் சிவாலய ஆசிரமம் வழிபாட்டு தலம், தியான மண்டபம் ஆகியவற்றைக் கொண்ட ஓரிட மையமாகச் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
நாட்டிலேயே இந்து சமயத்தினரால் வழிநடத்தக்கூடிய ஓரிட மையமாக இந்த ஆசிரமம் செயல்படும் என்று மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் டத்தோ ஆர். எஸ். மோகன் ஷான் கூறினார்.
அதே வேளையில், சிறந்த தியான மண்டபத்தையும் இது கொண்டிருக்கும் என்று இங்கு ஸ்ரீ ஜெகநாதர் சிவாலய ஆசிரமத்தின் கட்டுமானப் பணிக்கு நிதித் திரட்டுவதற்காக நடத்தப்பட்ட சுவாரலாயா சங்கீத கலாலயாவின் பரதநாட்டிய விழாவில் தலைமையுரை ஆற்றுகையில் குறிப்பிட்டார்.
“மலேசிய இந்து சங்கத்தின் வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய ஒரு நிகழ்வாக இது அமையும்” என்றார் அவர்.

ஜெகநாதர் சிவாலயத்தின் கும்பாபிஷேகம் வரும் டிசம்பர் 1ஆம் தேதி நடைபெறும் என்று மோகன் ஷான் மேலும் சொன்னார்.
இதன் கட்டுமானப் பணிக்கு நிதி திட்டுவதற்கு உதவும் பொருட்டு 2 மணி நேர பரதநாட்டிய நிகழ்ச்சியை இலவசமாகப் படைத்துக் கொடுத்த டாக்டர் பண்பரசி, அவரின் தாயாரும் சுவாரலாயா சங்கீத கலாலயாவின் தோற்றுநருமான ‘சமய சேவகர்’ ஸ்ரீமதி சரோஜினி கோவிந்தசாமி ஆகியோருக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியின் வெற்றிக்காக ஆதரவு வழங்கிய அனைவருக்கும் மோகன் ஷான் நன்றி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மலேசிய நால்வர் மன்றத்தின் தலைவர் டாக்டர் பாலகிருஷ்ணன் கந்தசாமி, மலேசிய பரதநாட்டிய சபாவின் தலைவர் திருமதி குமுதினி சிவநாதன், நட்டுவத் திலகம் இந்திரா மாணிக்கம், சங்கபூஷன் கணேசன் உள்பட சமய மற்றும் கலை ஆர்வலர்கள் கலந்து சிறப்பித்தனர்.

