செமினி, மார்ச் 8-

ஆண்களுக்கு இணையாக பெண்களும் தங்களது பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என ஐபிஎப் கட்சியின் மகளிர் பிரிவு தலைவி ராஜம்மா வலியுறுத்தினார்.

பெண்களின் மகத்துவத்தை போற்றும் உன்னத நாளாக உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகின்றது. இந்த நல்ல நாளில் பெண்கள் தங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற சிந்தனையை மனதில் ஆழமாகப் பதிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

சுய காலில் நின்று குடும்பத்தை வழிநடத்த வேண்டும் என்ற மனப் போக்கை மகளிர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். யாரையும் நம்பி நாம் இருக்கக் கூடாது. நமது தேவைகளை நாமே கவனித்துக் கொள்ளும் அதே தருணத்தில் குடும்ப மேம்பாட்டிற்கும் நம்மால் முடிந்த பங்களிப்பை தொடர்ந்து வழங்க வேண்டும் என உலக மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக அரங்கில் சாதனை படைத்த பல பெண்களை நாம் பார்க்கின்றோம். அப்படிப்பட்டவர்களை சிறந்த முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு வாழ்க்கையில் நாமும் மேம்பட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் செயல்பட வேண்டும் என ராஜம்மா குறிப்பிட்டார்.