பத்துமலை, நவ.19-
ஆயிரக்கணக்கான பக்தர்களின் பக்தி பரவசத்தோடு மிகவும் பிரம்மாண்டமான முறையில் இன்று நடந்தேறியது பத்துமலை திருத்தல ஸ்ரீ மகா துர்க்கை அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்.
இந்த ஸ்ரீ மகா துர்க்கை அம்மன் கோவில் அஷ்ட பந்தன நவகுண்ட பட்ச மகா கும்பாபிஷேகத்தை இந்தியா மற்றும் உள்நாட்டு சிவாச்சாரியார்கள் தலைமையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதனையொட்டி காலை மணி 6.00க்கு ஆறாம் கால யாக பூஜை,மகா யாக நிறைவு, யாத்ரா தானம் முதலியவற்றைத் தொடர்ந்து காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் ஆர்.நடராஜா தலைமையில் நடைபெற்ற ஸ்ரீ மகா துர்க்கை அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில் மஇகா தேசிய துணைத்தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன், சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பராயுடு உள்ளிட்ட பல பிரமுகர்கள் சிறப்பு வருகை புரிந்தனர்.
துர்க்கை அம்மன் அருளைப் பெறுவதற்காக நாடு முழுமையிலும் இருந்து பக்தர்கள் ஸ்ரீ மகா துர்க்கை அம்மன் கோவில் விமான திருக்குட நன்னீராட்டுப் பெருவிழாவில் கலந்து கொண்டனர்.