தமிழ் பேசும் அமைச்சரே எங்களுக்குத் தேவை! -ராஜசேகரன் கோரிக்கை

72

கோலாலம்பூர், ஏப்.19-

நாட்டில் இந்திய சிகை அலங்கரிப்பாளர்கள் எதிர்நோக்கும் பிரச்னைகள் குறித்து எடுத்துரைப்பதற்குத் தங்களுக்குத் தமிழ் பேசக்கூடிய ஓர் அமைச்சர் கட்டாயம் தேவை என்று மலேசிய இந்திய சிகை அலங்கரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் செயலாளர் ஆர்.ராஜசேகரன் தெரிவித்தார்.

“எங்களுக்குப் பரீட்சயமான, நாங்கள் சொல்லக்கூடிய பிரச்னைகளைக் காது கொடுத்துக் கேட்கக்கூடிய ஓர் அமைச்சரையே நாங்கள் விரும்புகிறோம்” என்று இந்திய சிகை அலங்கரிப்பாளர்கள் சங்கத்தின் 23ஆவது ஆண்டு பொதுக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசினார்.

“நாங்கள் எந்த மாதிரியான பிரச்னைகளை எதிர்நோக்குகிறோம். அந்நிய தொழிலாளர்களின்றி நாங்கள் எப்படி சிரமப்படுகிறோம் என்பன போன்ற விவகாரங்களைச் செவிமடுப்பதற்கு எங்களுக்கு தமிழ் பேசத் தெரிந்த ஓர் அமைச்சர் வேண்டும்” என்றார்.

அந்நிய தொழிலாளர்கள் பற்றாக்குறையால் எங்களின் வியாபாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பலர் தங்களின் வாழ்வாதாரத்தை இழக்க வேண்டிய சூழ்நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். இவற்றையெல்லாம் கேட்பதற்குத் தமிழ் பேசத் தெரிந்த ஓர் அமைச்சர் தேவை என்று அவர் வலியுறுத்தினார்.