ரவாங், ஆக 12-

அண்மையில் கொரியா, சியோல் நகரில் நடைபெற்ற அனைத்துலக திறன் வாய்ந்த புத்தாக்க கண்டுபிடிப்பிற்கான ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட ரவாங் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பங்கெடுத்து வெள்ளி பதக்கத்தை வென்று பள்ளிக்கு பெருமை தேடித் தந்துள்ளனர்.

பேராசிரியர்கள், உயர்கல்வி கழக மாணவர்கள், பல்கலைகழக மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், இடைநிலைப்பள்ளி மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்ட இந்தப் போட்டியில் நந்தகிஷோர் சரவணன், தீபிகாஸ்ரீ விக்னேஸ்வரன், கிஷாந்தினி சண்முகம் ஆகியோரும் கலந்து கொண்டு தங்களது படைப்புகளை வெளிப்படுத்தி வெற்றிப் பெற்றனர்.

இந்த மூன்று மாணவர்களும் ஏற்கனவே மலேசியாவில் நடைபெற்ற அறிவியல் புத்தாக்கப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றிப் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாணவர்களின் பெற்றோர்களான சரவணன் – சங்கீதா, விக்னேஸ்வரன்-சுகுனேஸ்வரி, சண்முகம்-பூர்ணிமா ஆகிய 3 தம்பதிகளும் தங்களது பிள்ளைகள் கொரியா வரை சென்று வருவதற்கு ஆதரவு வழங்கிய அனைவருக்கு நன்றிகளை தெரிவிக்கும் வகையில் ரவாங், தாமான் முகிபா ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் விருந்து நிகழ்ச்சியை இக்குழுவின் தலைவர் சரவணன் ஆறுமுகம் ஏற்பாடு செய்தார்..

அம்மூன்று மாணவர்களும் அவர்களின் ஆசிரியரும் கொரியாவில் நடைப்பெற்ற போட்டிக்கு சென்று வருவதற்கு சமூக சேவையாளர்கள் சிலர் நிதியுதவி வழங்கினர். அவர்களின் ஆதரவு விமான டிக்கெட்டுகள், தங்கும் வசதிகள், உணவு, பதிவு கட்டணத்திற்கு பெரும் உதவியாக இருந்தது என்று சரவணன் ஆறுமுகம் தெரிவித்தார்.

செலாயாங் நாடாளுமன்ற உறுப்பினர் வில்லியம், ரவாங் சட்டமன்ற உறுப்பினர் சுவா வெய் கியாட், ரவாங் தாமான் முகிபா மாரியம்மன் ஆலயத் தலைவர் டத்தோ சுரேஸ் ராவ், ரவாங் இந்திய மக்கள் சமூக நல இயக்கத் தலைவர் உதயகுமார், ரவாங் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் கமலா கணேசன், மஞ்சா பிந்தார் பாலர் பள்ளி தோற்றுநரும் இந்த மாணவர்களை தயார்படுத்தியவருமான மாலினி ஏகநாதன், ஆசிரியர் சங்கீதா கன்னியப்பன் ஆகியோருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

காய்ச்சலை குணப்படுத்தும் ‘மூலிகை ஜெல்’ தயாரிப்பை படைத்து வெற்றி பெற்ற அந்த மாணவர்கள் இந்த விருந்து நிகழ்ச்சியிலும் தங்களது படைப்பை வெளிப்படுத்தினர்.