கோலாலம்பூர், செப் 3-
மலேசிய தினத்தையொட்டி சுற்றுலா துறை அமைச்சின் ஆதரவோடு கலை, கலாச்சார ராதா கிருஷ்ணன் ஃபைன் ஆர்ட்ஸ் ஏற்பாட்டில் வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை தலைநகர் தாமான் தித்தி வங்சாவில் மலேசிய கலாச்சார கொண்டாட்ட விழா மிகப்பெரிய அளவில் நடைபெறவிருக்கிறது.
தினசரி காலை 9.00 மணி முதல் இரவு 11 மணிவரை நடைபெறும் இந்த விழாவைக் காண 20,000 பேர் திரள்வர் என்று இதன் ஏற்பாட்டுக் குழு தலைவர் நளினி தெரிவித்தார்.
நாட்டின் புகழ்பெற்ற கலைஞர் டத்தோ எலிகேட் ஆறுமுகம், சந்தேஷ், டார்க்கி, லோக்காப் உட்பட மண்ணின் மைந்தர்கள் இந்த விழாவில் பங்கேற்று பொதுமக்களை மகிழ்விப்பார்கள்.
இந்திய பாரம்பரிய கலை கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் சிலம்பாட்டம், உருளிமேளம், பாரம்பரிய இந்திய நடனங்கள் இதில் இடம் பெறும்.
ஐந்து தினங்கள் நடைபெறும் இந்த விழாவில் இரண்டாயிரம் கலைஞர்கள் பங்கேற்கிறார்கள்.
மலேசிய சாதனையாளர் புத்தகத்தில் இடம் பிடிக்கும் வகையில் கொண்டாட்டம் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
சுற்றுலா துறை அமைச்சர் டத்தோஸ்ரீ தியோ கிங் சிம், ஒற்றுமை துறை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி உட்பட பல முக்கிய பிரமுகர்கள் சிறப்பு வருகை புரிவர்.
இலவசமாக நடைபெறும் இந்த கொண்டாட்டம் விழாவைக் காண பொதுமக்கள் திரண்டு வரும்படி கேட்டுக் கொள்கிறோம் என்றார் அவர்.