ஷா ஆலாம் | 9/9/2021 :-

பண மோசடி குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள டத்தோஶ்ரீ அஹ்மாட் மஸ்லானை மக்களவையின் துணை சபாநாயகராக நியமனம் செய்ய வகுக்கப்பட்டுள்ள திட்டம் மக்களவையின் மாண்பை சீர்குலைப்பதற்கு சமமாகும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் சாடினார்.

நீதிமன்ற விசாரணையை எதிர்கொண்டுள்ள ஒருவரை மக்களவையின் துணைத் தலைவராக நியமித்தால் அஃது உள்நாட்டிலும் அனைத்துலக அரங்கிலும் கேலிக்கூத்தாக மாறிவிடும்.

மக்களவையின் துணைத் தலைவர் பதவிக்கு தகுதியானவர்கள் இன்னும் அதிகமானோர் உள்ளனர். அதை விடுத்து நீதிமன்ற விசாரணையில் சிக்கியுள்ள ஒருவருக்கு இத்தகைய பதவிகள் வழங்கப்படகூடாது என்று கருத்துரைத்த கணபதிராவ், பேரா மாநில சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் டாக்டர் அப்துல் அஸிஸ் பாரி வலியுறுத்தியுள்ள இதே கருத்தை தாம் வரவேற்பதாகவும் சொன்னார்.

பொந்தியான் நாடாளுமன்ற உறுப்பினரான டத்தோஶ்ரீ அஹ்மாட் மஸ்லான் 2001 பண மோசடி, பயங்கரவாதத்திற்கு எதிரான நிதி தடுப்பு சட்டம் பிரிவு 31இன் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டு நீதிமன்ற விசாரணையை எதிர்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.