ஷா ஆலம்:
2026-ஆம் ஆண்டுக்கான வரவுச் செலவு திட்டம், மடானி அரசாங்கம் தொடர்ந்து இந்திய சமூகத்தின் நலன் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதாகச் சிலாங்கூர் மாநில மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு தெரிவித்தார்.
இதற்கு தீபாவளி பெருநாளை முன்னிட்டு வரும் அக்டோபர் 18-ஆம் தேதி முதல் வழங்கப்படவுள்ள எஸ்டிஆர் உதவித் தொகை சான்றாகும் என்று அவர் குறிப்பிட்டார். பெருநாள் காலத்தில் மக்களின் நிதிச்சுமையை குறைக்க இந்நிதி உதவும் என்றார் அவர்
மேலும், தீபாவளியை முன்னிட்டு இரண்டு நாள்களுக்கு 50% டோல் கட்டண தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இது, குடும்பத்தாருடன் பெருநாளைக் கொண்டாட சொந்த ஊர்களுக்குப் பயணமாகும் மக்களின் நிதி சுமையைக் குறைக்க அரசாங்கம் காட்டும் அக்கறையின் அடையாளமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கம் மேலும், RM100 சாரா உதவித் தொகை வழங்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது, நாளுக்கு நாள் உயர்ந்து வரும் வாழ்க்கை செலவீன சவால்களை எதிர்கொள்ள மக்களுக்கு உதவ அரசாங்கம் காட்டும் உறுதியான முயற்சியாகும்.
மிக முக்கியமாக, இந்திய சமூகத்திற்கான STR மற்றும் SARA திட்டங்களின் ஒதுக்கீடு RM600 மில்லியனிலிருந்து RM1 பில்லியனாக உயர்த்தப்பட்டுள்ளது. இது, குறைந்த வருமானம் பெறும் இந்தியக் குடும்பங்களுக்கும் அந்த நன்மைகள் நேரடியாக சென்றடைய அரசாங்கம் காட்டும் உண்மையான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது என்றும் பாப்பாராய்டு கூறினார்.
அதனைத் தொடர்ந்து, “Vanakam MADANI” அல்லது “Deepavali Food Basket” எனப்படும் திட்டத்தின் கீழ், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குறைந்த வருமானம் பெறும் இந்தியக் குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகின்றன. இஃது, இந்திய சமூக நலனில் அரசாங்கம் காட்டும் அக்கறையின் சான்றாகும்.
இந்த அனைத்து முயற்சிகளும் இந்திய சமூகத்தின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் முன்னேற்றப் பயணத்தில் இந்திய சமூகமும் பின்தங்காமல் இருப்பதை உறுதி செய்யும் பிரதமர் அன்வாரின் தொடர்ச்சியான அக்கறைக்கும் முயற்சிக்கும் இவ்வேளையில்மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் பாப்பா ராய்டு கூறினார்.